சிந்து சமவெளியில் செழித்த மரம்!

சிந்து சமவெளி நாகரிகக் காலத்துக்கு முன்பிருந்தே இந்திய மக்களால் பரவலாக உண்ணப்பட்ட ஒரு சில பழங்களில் முக்கியமானது இலந்தைப் பழம். இதன் எச்சங்கள் கி.மு. 2500-1500 காலச் சிந்துசமவெளி அகழாய்வுக் களங்களில் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், இந்தத் தாவரத்தின் மரக் கட்டையால் உருவாக்கப்பட்ட, குறிப்பாக உலக்கை உரல் போன்ற சிறிய மரப்பொருட்களும் இந்த நாகரிகக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நிறங்கள் பல, அளவும் பல

இலந்தைப் பழம் பற்றி யஜுர் வேதம், சூத்ர நூல்கள், வடமொழிக் காப்பியங்கள், மருத்துவ நூல்கள், அர்த்தசாஸ்திரம் போன்றவற்றிலும் குறிப்புகள் உள்ளன. இலந்தை என்ற சொல் பக்தி இலக்கியக் காலத்தில் வழக்கில் வந்திருக்க வேண்டும். பண்டைய தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்தத் தாவரம் இலந்தை என்ற பெயரில் அல்லாமல் இரத்தி என்ற பெயரில் நற்றிணை, புறநானூறு உள்ளிட்ட நூல்கள் வழியாகச் சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ளது.

திவாகர, பிங்கல நிகண்டுகள் இலந்தைக்கு இரத்தியைத் தவிர இறலி என்ற பெயரையும், பிங்கல நிகண்டு சற்றுக் கூடுதலாகக் குல்லரி, குவலி, கோலி, வதரி, கோற்கொடி போன்ற இதர பெயர்களையும் குறிப்பிடுகின்றன. இவை இலந்தையின் வெவ்வேறு ரகங்களின் பெயர்கள் என்று நான் நினைக்கிறேன்.

பிரம்மனா நூல்களும் யஜுர் வேதமும் மூன்று இலந்தை ரகங்களைப் பற்றி குறிப்பிடுகின்றன: பதரா என்ற பெரிய பழ ரகம், கோலா என்ற நடுத்தரப் பழ ரகம், கர்கன்டா என்ற சிறிய பழ ரகம். தற்போது இந்தியாவில் நாற்பதுக்கும் மேற்பட்ட இலந்தைப் பழ ரகங்கள் காணப்படுகின்றன. இவை அளவு அடிப்படையில் மட்டுமின்றி நிற அடிப்படையிலும் (சிவப்பு, ஆரஞ்சு, சிவப்பு, பழுப்பு கலந்த சிவப்பு, சாக்லேட் நிறம், மஞ்சள், பசுமை கலந்த மஞ்சள் நிறப் பழ ரகங்கள்), உருவ அடிப்படையிலும் (உருண்டை, முட்டை வடிவம், நீள்முட்டை வடிவம்) பிரிக்கப்பட்டுள்ளன.

மான், முயல் உண்ட பழம்

மனிதர்கள் மட்டுமின்றி மான்கள், முயல்கள் போன்ற விலங்குகளும் இலந்தைப் பழத்தை விரும்பி உண்டன என்று மேற்கூறிய நூல்கள் குறிப்பிடுகின்றன. பழம் இனிப்பு அல்லது புளிப்பு கலந்த இனிப்புச் சுவையைக் கொண்டது. பழத்தை நேரடியாகவோ, திராட்சை மாதிரி உலர்த்தியோ, ஆவியில் வேகவைத்தோ, பழுக்கவைத்தோ சாப்பிடலாம். மிளகாய்ப்பொடி, உப்பு சேர்த்து அரைத்துத் தட்டில் காயவைத்த இலந்தை வடைகள், ஒருசில கடைகளில் விற்கப்படுகின்றன. கோலா போன்ற சில வகை ரகங்கள் ஊறுகாயாகத் தயாரிக்கப்படுகின்றன.

ஜிஜிஃபஸ் மவுரிசியானா (Ziziphus mauritiana) என்ற தாவரப் பெயரைக் கொண்ட இலந்தை ஒரு சிறிய, பசுமையிலை மரம்; ஏறத்தாழ 15 மீட்டர் உயரம் வளரக் கூடியது; முட்கள் கொண்டது; பொதுவாக வறண்ட நிலப் பகுதிகளிலும் முள் காடுகளிலும் காணப்படுவது. பூக்களை ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்திலும் பழங்களைச் செப்டம்பர்-பிப்ரவரி காலகட்டத்திலும் தாங்கியிருக்கும்.

ஒரு மரம் ஒரு ஆண்டுக்கு ரகத்துக்கேற்ப 15 முதல் 200 கிலோ அளவு பழங்களைக் கொடுக்கும் (சராசரியாக 80 கிலோ); தமிழக மரங்கள் அதிகபட்சமாக 20 கிலோ அளவு பழங்களைக் கொடுக்கின்றன.

நன்றி: ஹிந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *