மரம் வளர்ப்பதில் புதுமை

செடி வைத்து நடவு செய்து 2 ஆண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகளை விதையில்லாமல் 3 மாத்திலேயே மரமாக உருவாக்கி நெல்லையை சேர்ந்த தன்னார்வ தொண்டர்கள் சாதித்து வருகின்றனர்.
நெல்லை ராஜவல்லிபுரத்தை சேர்ந்த இளைஞர்கள் செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பை துவக்கி மரக்கன்றுகள் வளர்த்து பசுமைப்புரட்சி ஏற்படுத்தி வருகின்றனர். விதைகள் பாவு செய்து மரக்கன்றுகளை உற்பத்தி செய்த தன்னார்வ இளைஞர்கள், மரத்தின் பெரிய கம்புகளை வெட்டி, நடவு செய்து, இயற்கை உரங்களை போட்டு 90 நாட்களிலேயே மரங்களாக உருவாக்கி புதிய சாதனையை படைத்துள்ளனர்.

செப்பறை வல பூமி பசுமை உலகம் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் அர்ஜூனன், ராஜூ, சின்னத்தம்பி, ரவிக்குமார், சங்கர் உள்ளிட்ட இளைஞர்கள் நேற்று நெல்லை கலெக்டர் செல்வராஜை சந்திந்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், “விதைகளை பாவு செய்து மரக்கன்றுகளை உருவாக்கி, அதை மரங்களாக மாற்ற 2 முதல் 3 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் மரங்களில் உள்ள கிளைகளின் கம்புகளை வெட்டி, இயற்கை உரத்தை போட்டு, 3 மாதங்களில் அவற்றை மரங்களாக மாற்றும் புதிய முறையை ராஜவல்லிபுரத்தில் செயல்படுத்தியுள்ளோம்.

நவீன காலத்தில் நமது வசதிக்கேற்ப இந்த முறையில் மரங்களை குறுகிய காலத்தில் வளர்க்க முடியும். மரம் வளர்ப்பதால் பசுமைப்புரட்சியும், மழை வளமும் ஏற்படும். இந்த புதிய முறையால் ஒவ்வொரு கிராமத்தையும் 2 ஆண்டுகளில் பசுமையாக்க முடியும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பை சேர்ந்த அர்ஜூனன் கூறுகையில், “எங்கள் அமைப்பு சார்பில் விதைகளை போட்டு மரக்கன்றுகளை உருவாக்கி அதை மக்களுக்கு இலவசமாக வழங்கிவந்தோம்.

ராஜவல்லிபுரம், தாழையூத்து பகுதியில் 27 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கியுள்ளோம். ராஜவல்லிபுரத்தில் மரக்கன்றுகளை வளர்த்து பசுமை புரட்சி ஏற்படுத்தியுள்ளோம்.மரத்தின் கம்புகளை வெட்டி, இயற்கை உரங்களை போட்டு, மரங்களாக உருவாக்கும் புதிய முயற்சியை செய்தோம்.

விதை போட்டு 2 முதல் 3 ஆண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், புதிய முறையில் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து பலனை தந்துள்ளது.

இந்த முறைக்கு பணம் அதிகம் செலவாகது.

தண்ணீரும் குறைவாக தான் செலவாகும். இந்த புதிய முறையில் வேம்பு, மா, அத்தி, அரசு, பூவரசு போன்ற மரங்கள் வளர்ந்துள்ளன.

எங்களது முயற்சிக்கு பாலாமடை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முகம்மதுகனி வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார்.

மரக்கன்றுகளை வளர்ப்பதற்கு பதிலாக, மரத்தின் கம்புகளை வெட்டி அதை மரமாக மாற்றும் திட்டத்தையும் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தவேண்டும். இதற்கான பயிற்சியை அளிக்கவும் எங்கள் அமைப்பு தயராக உள்ளது.
இவ்வாறு அர்ஜூனன் கூறினார்.கலெக்டரிடம் மனு அளித்த செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், மரக்கம்புகளால் 90 நாட்களில் உருவாக்கிய மரக்கன்றுகளையும் எடுத்துவந்து கலெக்டரிடம் காட்டினர்.

நன்றி: தினமலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *