தமிழக நீர்நிலையில் தினமும் கலக்கும் 148 கோடி லிட்டர் கழிவு நீர்!

கர்நாடகா அரசு, தினமும், 148 கோடி லிட்டர் கழிவுநீரை, நீர்நிலைகள் வழியாக தமிழகத்திற்கு அனுப்புவதும், காவிரியில் மட்டும், 59 கோடி லிட்டர் கழிவுநீர் கலக்க விடுவதும், வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நிர்ணயித்த அளவை விட, 10 மடங்கு மாசு அதிகம் உள்ளதை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளதால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து தடுக்க, அரசு ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில், நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்பட்டு, குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, தமிழக அரசு, 1,928 கோடி ரூபாயில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம், 2013 முதல் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் குடிக்கும் தண்ணீர் சுகாதாரமானது தானா? என்ற கேள்வி எழுகிறது.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

அதிர்ச்சி தகவல்:

இதற்கு காரணம், கர்நாடகாவில் இருந்து, காவிரியில் தினமும், 53 மில்லியன் லிட்டர் கழிவுநீர் கலக்க விடும், அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. கர்நாடகா அமைச்சரின் பேச்சு, உறுதிபடுத்தி உள்ளது. சமீபத்தில், கர்நாடகா மேலவையில் பேசிய, சிறிய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, ‘பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளில், தினமும் குடிநீர் குழாய்கள், போர்வெல் மூலமாக, 1,950 மில்லியன் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது; இதில், 148 கோடி லிட்டர் கழிவுநீராக, பலவகையில் ஆறுகள், கால்வாய்கள் வழியாக, தமிழகத்துக்குள் செல்கிறது’ என, தெரிவித்து உள்ளார்.மேலும், ‘பினாகினி, தென்பெண்ணை ஆறுகளின் வழியாக, 88.9 கோடி லிட்டரும்; 59.3 கோடி லிட்டர் கழிவுநீர், அர்காவதி, காவிரி ஆறுகளில் கலந்து தமிழகத்துக்கு செல்கிறது. இவ்வாறு, வீணாகும் கழிவுநீரை மறுசுழற்சி செய்து, கோலார், சிக்பல்லாபூர் மாவட்டங்களில் உள்ள, வறண்ட ஏரிகளுக்கு திருப்பி விட, அரசு திட்டமிட்டு உள்ளது’ என்றும், அவர் தெரிவித்தார்.அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆய்வு :

இதற்கிடையே, காவிரியில் மாசுபட்ட நீர் கலக்கிறதா என, ஆய்வு நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தொடர்ந்து ஐந்து நாட்கள், காவிரியில் கலக்கும் நீரின் தன்மை குறித்து பரிசோதித்தனர்; ஆய்வு முடிவுகள், அதிர்ச்சி தரும் வகையிலேயே உள்ளன.மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘தண்ணீரில், 3 மி.கி., அளவில் தான், பி.ஓ.டி., எனப்படும், ‘பயோ ஆக்சிஜன் டிமான்ட்’ இருக்க வேண்டும்; ஆனால், 29 மி.கி., என்ற அளவில் உள்ளது. நிர்ணய அளவை விட, 10 மடங்கு அதிகம்; அதிக அளவில் மாசு நிறைந்துள்ளது, உறுதியாகி உள்ளது. இதுகுறித்த அறிக்கை, தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது’ என்றனர்.சுற்றுச்சூழல் பாதிப்பு மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகவும், மக்கள் நல்வாழ்வு சார்ந்தும் உள்ளதால், மாநில அரசு, சிறப்புக்கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. கழிவுநீர் கலப்பை, சட்ட ரீதியாக தடுக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.மேலும், காவிரியில் இருந்து, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு வந்து சேரும் குடிநீரில், மாசு அளவை, தினமும் தானியங்கி முறையில் கணக்கிடவும், ரசாயனம் உள்ளிட்ட மாசுக்களை, முற்றிலும் நீக்கும் வகையில், சுத்திகரிப்பு நிலையை மேம்படுத்தவும், அரசு திட்டமிட்டு உள்ளது.

‘வடிகால்வாயான அவலம்’:

தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குனர், இளங்கோ கூறியதாவது: கர்நாடகா, பூகோள ரீதியாக மேடான பகுதி என்பதால், அங்கிருந்து கழிவுநீர் நேரடியாக, தமிழகத்தில் காவிரியில் கலக்கும் சூழல் உள்ளது. நதியாக இருந்த காவிரி, வடிகால்வாயாக மாற, கர்நாடகாவே காரணம்.மாசுபட்ட நீரால், வேளாண் உற்பத்தி குறைந்து விட்டது; மேட்டூர் அணை நீரும், வண்ணம் மாறி உள்ளது. குடிக்கவோ, குளிக் கவோ, உகந்தது அல்ல; பயன்பாட்டுக்கு, ஒட்டுமொத்த மாசுகளையும் நீக்க, பலகட்ட சுத்திகரிப்பு முறை வேண்டும்.இந்த நீரை பருகுவதால், டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலும்பு, கல்லீரல், சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும். சுற்றுச்சூழல், சுகாதாரம், பொருளாதார ரீதியான பாதிப்பு என்பதால், தமிழக அரசு, இதில் சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

தண்ணீரை மாசுபடுத்துவது தனிநபராக இருந்தாலும், அரசாக இருந்தாலும் குற்றம்; சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். தமிழக மக்கள், குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் பயன்படுத்தும் நீரில், கழிவுநீரை கர்நாடகா கலந்துள்ளது, தேச துரோக செயல்

மற்றவரின் கருத்துக்கள்
நல்லுசாமி
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர்

காவிரிநீரை, முன் டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டுமே பயன்படுத்தினர். இப்போது, சென்னை உள்ளிட்ட பல மாவட்ட மக்களும், குடிநீர் தேவைக்காக பயன்படுத்துகின்றனர். தண்ணீரில் விஷத்தை கலப்பது போல், கழிவுநீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது, கொடூரமான செயல்
ஓய்வுபெற்ற பொறியாளர்
சென்னை

நன்றி: தினமலர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *