காணாமல் போன நதிகள்!

“மலை முழுங்கி மகாதேவன்” என்று ஒரு வசனம் உண்டு. மதுரை போன்ற இடங்களில் க்வாரி செய்து மலைகளை காணாமல் செய்த புண்ணியவான்கள் நாம் அறிவோம்..

நதிகளும் இப்படி காணாமல் போய் கொண்டிருக்கின்றன என்பது தான் சோகம். நகர வளர்ச்சி,  நீர் பற்றிய அலட்சியம், பணம் மட்டுமே கொள்கை என வாழும் அரசியல் வாதிகள் போன்ற காரணங்களால் நடத்த படும் சோக  நாடகம்  இது. ஹிந்துவில் இருந்து தகவல்…

கோவை கவுசிகா நதியை அறிவீர்களா?

கோவையில் பவானி ஆற்றை அறிவீர்கள். நொய்யல் ஆற்றை அறிவீர்கள். சிறுவாணி மிகவும் பிரபலம். ஆனால், கவுசிகா ஆற்றை அறிவீர்களா? பெயரையாவது கேள்விப் பட்டதுண்டா? அவ்வளவாக அறியப்படாத ஆறு அது. கவுசிகா என்று ஓர் ஆறு இங்கே ஓடியதா என்று ஆச்சர்யத்துடன் கேட்கிறார்கள் கோவை மக்கள்.

கோவை தடாகம் அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான குருடி (குரு சீரடி) மலை யில் சுமார் 100 அடி ஆழமான பள்ளத்தில் உற்பத்தியாகிறது கவுசிகா நதி.

குருடம்பாளையம், நரசிம்மநாயக் கன்பாளையம் ஆகிய பகுதிகளில் இருக்கும் தாளமடல் ஓடை, தன்னாசி ஓடை உள்ளிட்ட ஏராளமான ஓடைகளை தன்னுடன் இணைத்துக்கொள்ளும் கவுசிகா நதி இடிகரை, அத்திப் பாளையம், கோவில்பாளையம், வாகராயம்பாளையம், தெக்கலூர், வஞ்சிப்பாளையம் வழியாக திருப்பூரின் சுல்தான்பேட்டை அருகே நொய்ய லுடன் கலந்தது. கவுசிகா நதிப் படு கைகளை ஆய்வுசெய்த அண்ணா மலைப் பல்கலைக்கழகம், அதில் கிடைத்த மண்பாண்டங்களைக் கொண்டு இது 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான நதி என்று குறிப்பிடு கிறார்கள். அருணகிரிநாதர் திருப்புகழில் இந்த நதியைப் பற்றி பாடியிருக்கிறார். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை கவுசிகா நதியில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. காட்டாற்று வெள்ளத் துக்கு அஞ்சிய மக்கள் தங்கள் குடியிருப்புகளை நகரத்துக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இன்று இந்த நதி இல்லை. நகரமயமாக்கலின் விளைவாக கவுசிகா நதியின் நீர் ஆதாரங்கள் அழிக்கப்பட்டன. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே நதியின் நீரோட்டம் நின்றுவிட்டது. தற்போதைய வடகிழக்குப் பருவ மழையிலும் நதியில் தண்ணீர் வர வில்லை. அதேசமயம் அரசு மனம் வைத்தால் ஆற்றை மீண்டும் உயிர்ப் பிக்க முடியும் என்கிறார் அத்திக்கடவு – கவுசிகா நதி மேம்பாட்டுச் சங்கத்தின் செயலாளர் செல்வராஜ். அத்திக்கடவு – அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தில் கவுசிகா நதியைச் சேர்ப் பது மட்டுமே அதற்கு ஒரே வழி என் கிறார் அவர். ஆனால், அந்தத் திட்டமே நீண்டகாலமாக இழுபறியில் இருப்பதுதான் வேதனை.

கோவை கோவில்பாளையம் அருகே வறண்டு கிடக்கும் கவுசிகா நதி. Courtesy: Hindu
கோவை கோவில்பாளையம் அருகே வறண்டு கிடக்கும் கவுசிகா நதி. Courtesy: Hindu

 

 

 

சுதந்திரத்துக்குப் பின்பான ஐந் தாண்டு திட்டங்களில் எத்தனையோ பெரிய அணைகள் எல்லாம் கட்டி முடிக் கப்பட்டன. ஆனால், தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் நிறை வேற்றப்படாத ஒரே ஒரு திட்டம் உண்டு என்றால் அது அத்திக்கடவு – அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்தான். அப்படி ஒன்றும் முடிக்க இயலாத சிக்கலான அல்லது பிரமாண்டமான திட்டம் எல்லாம் இல்லை அது. அவ்வளவும் அலட்சியம்.

அத்திக்கடவு – அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் என்ன என்பதை பார்ப்போம். பில்லூர் அணை மற்றும் பவானி சாகர் அணை களை நிரப்பும் பவானி ஆறு கூடு துறையில் காவிரியுடன் கலந்து கடலில் கலக்கிறது. இப்படி கடலில் கலக்கும் உபரி நீபரில் நீரில் 2 டி.எம்.சி-யை மட்டும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது கால்வாய்கள் மூலம் வறட்சியான பகுதியான அவி நாசிக்கு திருப்பிவிடுவதுதான் திட்டத் தின் நோக்கம். இதன் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட் டங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் நிரம்பும். நிலத்தடி நீர் மட்டம் உயரும். காமராஜர் ஆட்க்காலத்தில் திட்டம் தொடங்கப் பட்டபோது இதன் மதிப்பீடு ரூ.246 கோடி. பின்பு அது ரூ. 310 கோடியானது. 2011-12-ல் அது ரூ. 1,862 கோடியாக உயர்ந்தது.

திட்டம் தொடங்கப்பட்டு பாதியில் நின்றால்கூட ஏதேனும் காரணம் சொல் லலாம். ஆனால், 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் திட்ட வரைவுகூட வெளி யிடப்படவில்லை; கால்வாய் பாதைகள் வரையறுக்கப்படவில்லை என்பது எவ்வளவு பெரிய அநியாயம். கவுசிகா நதியை நம்பி இருந்த சுமார் 22 ஊர்களில் விவசாயம் அழிந்துவிட்டது. சுமார் 1,000 கிணறுகள் வறண்டுவிட்டன. 1980-களில் 100 அடியில் கிடைத்துவந்த நிலத்தடி நீர், இப்போது 1,200 அடிக் கும் கீழே சென்றுவிட்டது. பாசனத்தை விடுங்கள், குடிக்க தண்ணீர் இல் லாமல் அல்லாடுகிறார்கள் மக்கள். பால மலை வனப் பகுதியில் தண்ணீர் இல்லாமல் மேட்டுப்பாளையம் சுற்று வட்டாரங்களில் யானைகள் ஊருக்குள் புகுந்துவிடுகின்றன. அதேசமயம் கடந்த 15 ஆண்டுகளில் பவானி சாகர் அணை ஐந்து முறை நிரம்பியிருக்கிறது. சுமார் 100 டி.எம்.சி. உபரி நீர் கடலில் கலந் திருக்கிறது. வயிறு எரிகிறார்கள் விவ சாயிகள். ஒரு சிறு திட்டம் மூலம் 2 டி.எம்.சி தண்ணீரைத் திருப்பிவிட்டு மக்களின் தாகம் தணிக்க இயலாத ஆட்சியாளர்களைப் பெற்றிருக்கிறோம் நாம். அதிகாரிகளிடம் பேசினால், ‘மத்திய அரசின் வெள்ள நீர் மேலாண்மை திட்டத்தில் நிதியுதவி பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது’ என்கிறார்கள். ஆனால், மத்திய அரசோ, ‘சட்டசபை யில் தீர்மானம் நிறைவேற்றி 25 சத வீதத் தொகையை ஒதுக்கி, திட்டப் பணிகளைத் தொடங்கினால் மட்டுமே நிதி ஒதுக்கப்படும்’ என்கிறது.

தாய் திட்டமான அத்திக்கடவு – அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தில் இருந்து உப திட்டமாக ஐந்து கி.மீ-க்கு குறுக்குக் கால்வாய் வெட்டினால் மட்டுமே கவுசிகா நதி மீண்டும் உயிர் பிழைக்கும். இதற்கு 0.5 டி.எம்.சி. தண்ணீர் இருந்தால் போது மானது. திட்டம் நிறைவேறினால் நரசிம்மநாயக்கன் பாளையம் தொடங்கி கணியாம்பூண்டி ஊராட்சி வரை மூன்று மாவட்டங்களில் 23 ஊர்கள் குடிநீர் மற்றும் பாசனம் பெறும்.

இதற்கிடையே கவுசிகா நதிக்கு தண்ணீர் வரத்துக்கு ஏற்பாடு செய்யாமல் திருப்பூர் மூணுகட்டிபாளையம் உட்பட நதியின் 10 இடங்களில் தடுப் பணைகளைக் கட்ட ஆய்வு செய்து வருகிறது நீர் வள ஆதார அமைப்பு. ஆனால், சட்டியில் இருந்தால் தானே அகப்பைக்கு வரும்? ஏற்கெனவே நதியின் வழித்தடத்தில் வடுகபாளை யம், அன்னூர் பச்சாபாளையம், தேவம் பாளையம், கரிச்சபாளையம், வாகை பாப்பம்பட்டி, கிட்டாம்பாளையம், திருப் பூர் – புதுப்பாளையம் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் இருக்கின்றன. ‘‘பணத்தை கொள்ளையடிக்கத் திட்டப் படும் திட்டங்கள் இவை” என்று கொந்த ளிக்கிறார்கள் விவசாயிகள்.

ஆகாத ஆட்கள் வீட்டுக்கு வந்தால் கூட அன்பாக ஒரு சொம்பு தண்ணீர் கொடுப்பார்கள் கோவை மக்கள். கொங்கு மண்ணின் விருந்தோம்பல் குணம் அது. அங்கு லட்சக்கணக்கான மக்களின் தாகம் தணித்த ஒரு நதியே தாகத்தில் தவிக்கிறது. நம் கண் முன்னால் சாகக் கிடக்கிறது அது. நதியைக் காப்பது ஆட்சியாளர்களின் கடமை மட்டுமில்லை; பெரும் புண்ணி யம் சேர்க்கும் அது!

நன்றி: ஹிந்து

One thought on “காணாமல் போன நதிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *