சொந்த செலவில், 20 ஆண்டுகளாக மரங்களை வளர்த்து வருகிறார், சேத்தூர் வெற்றிலை வியாபாரி தலைமலை.விருதுநகர், சேத்தூர் அருகே தேவதானத்தை சேர்ந்தவர் தலைமலை, 50. இவர், தினமும் சைக்கிளில் வெற்றிலை வியாபாரம் செய்கிறார்.
ஒரு நாள், வியாபாரத்தை முடித்து விட்டு வரும் போது, வெயிலின் கொடுமைக்கு மூதாட்டி இறந்ததை கண்டார். “மரம் இருந்தால், மூதாட்டி உயிரை காப்பாற்றியிருக்கலாம்’ என, எண்ணினார்.
அன்று முதல், மரம் வளர்க்க வேண்டும் என, ஆசை வந்தது. கடந்த 20 ஆண்டுகளாக சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி அன்று, மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வருகிறார்.
சுற்றியுள்ள கிராமங்கள், ரோடு ஓரம், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், கோயில்களில், ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார்; இவற்றை சொந்த செலவில், தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறார்.
இவரது சேவையை பாராட்டி குஜராத், தமிழக அரசுகள் விருது வழங்கியுள்ளன. வருமானத்தில் பாதியை, மரக்கன்றுகள் வளர்ப்பதற்கு செலவிடுகிறார்.
தேவதானம் நச்சாடை தவிர்தருளிய சுவாமி கோயில் பூஜைக்கு தேவையான பூக்களுக்காக, ஒரு தோட்டத்தை அமைத்துள்ளார்; அருகில் 120 மரக்கன்றுகளையும் பராமரித்து வருகிறார். மரக்கன்றுகளையும் இலவசமாக தருகிறார். இவரை 09363262808 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவரின் சேவையை பார்த்து நாமும் எதாவது செய்யலாமே?
நன்றி: தினமலர்